Followers

Tuesday 6 March 2012

சருமப் பொலிவுக்கு சம்பங்கி பூ தைலம்! இயற்கை தரும் இளமை வரம்!

 

இயற்கை தரும் இளமை வரம்!

சருமப் பொலிவுக்கு சம்பங்கி பூ தைலம்!

மலர்களில் சற்றே வித்தியாசமான பூ சம்பங்கி. சீக்கிரத்தில் வாடாத இதன் தடிமனான இதழ்களும், வாசனையும் நம் அழகுக்கு அழகு சேர்க்கும். மல்லிகைப்பூவின் வரிசையில் வரும் இந்த சம்பங்கியின் மலர் மட்டுமல்ல... இதன் விதை, இலை என அனைத்துப் பாகங்களும் அழகைக் கூட்டும் ஓர் அற்புத தொழிற்சாலை! சம்பங்கியின் சகல அழகு ரகசியங்களையும் இந்த இதழில் பார்ப்போமா..!

கொளுத்தும் கோடை வெயிலால் சொறி, படை வேர்க்குரு என சருமத்தை சகட்டுமேனிக்கு தாக்கத் தொடங்கும். இதிலிருந்தெல்லாம் சருமத்தைப் பாதுகாக்கிறது சம்பங்கி பூ தைலம்.

அரை கிலோ தேங்காய் எண்ணெயைக் காய்ச்சி, அதில் 50 கிராம் சம்பங்கி பூவைப் போட்டு இறக்குங்கள். இந்த தைலத்தை உச்சி முதல் பாதம் வரை தடவி, நன்றாகத் தேய்த்து, சம்பங்கி பூ குளியல் பவுடர் பயன்படுத்திக் குளியுங்கள். வேர்க்குரு விரட்டப்படுவதுடன், குளிர்ச்சியுடனும் வாசனையாகவும் நம் உடல் ஜிலுஜிலுக்கும்.

சம்பங்கி பூ குளியல் பவுடர் தயாரிக்க...

சம்பங்கி - 100 கிராம், வெள்ளரி விதை - 20 கிராம், பயத்தம்பருப்பு-200 கிராம்... இவற்றைச் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். தைலம் தேய்த்து குளிக்கும்போது இந்தப் பவுடரைப் பயன்படுத்தி வந்தால்.. தோல் மினுமினுப்பாக இருக்கும்.


உடம்பில் உள்ள தேவையற்ற முடியை நீக்குகிறது சம்பங்கி விதை.

சம்பங்கி விதை - 100 கிராம், கோரைக்கிழங்கு - 200 கிராம், பூலாங்கிழங்கு - 100 கிராம் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை ஒருநாள் விட்டு ஒருநாள் பூசி வர... தேவையற்ற முடி வலுவிழந்து உதிரத் தொடங்கும்.

முகத்துக்கு வசீகர அழகைக் கொடுக்கிறது சம்பங்கி ஃபேஸ் பேக்.

சம்பங்கி பூ - 2, தேங்காய்ப்பால் - 2 டீஸ்பூன் இரண்டையும் கலந்து அரைத்து, முகத்தில் பூசி 15 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். முகம் புத்துணர்ச்சியுடன் பிரகாசமாக ஜொலிக்கும்.

சிலருக்கு முகத்தில் பருக்கள் தோன்றி, முக அழகையே கெடுத்துவிடும். இதற்கு...

சம்பங்கி விதை - 50 கிராம், சம்பங்கி பூக்கள் - 50 கிராம், துளசி - 10 கிராம், லவங்கம் - 5 கிராம், வேப்பிலை-10 கிராம் இவற்றை அரைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பவுடரை வெந்நீரில் குழைத்து பருக்கள் மீது தடவி வர.. பருக்கள் குறையும்.

ஒரு கைப்பிடி சம்பங்கி பூக்களை, கொதிக்கும் தண்ணீரில் போட்டு வாரம் இருமுறை ஆவி பிடித்து வர.. முகத்தில் பருக்களால் ஏற்பட்ட தழும்புகள் இருந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.

தலை பொடுகை போக்கி, தலைக்கு பாதுகாப்பை கொடுக்கிறது சம்பங்கி இலை.

வெந்தயத்தூள் - 2 டீஸ்பூன், சம்பங்கி இலை - 3... இரண்டையும் சேர்த்து அம்மியில் அரைத்துக் கொள்ளுங்கள். இதில் 2 டீஸ்பூன் எலுமிச்சைச் சாறை கலந்து தலைக்கு பேக் போடுங்கள். அரிப்பு, பொடுகு அத்தனையும் நீங்கி, கூந்தல் வாசம் வீசும்.

உடம்பைத் தாங்கி நிற்கும் பாதங்களில் ஏற்படும் வலி மற்றும் வெடிப்பைப் போக்குகிறது சம்பங்கி.

இதன் இலையை மையாக அரைத்து பாதத்தில் தடவிவர... பாதவலி பறந்துவிடும்.

200 கிராம் நல்லெண்ணெயுடன், 50 கிராம் சம்பங்கி பூக்களைப் போட்டுக் காய்ச்சுங்கள். இதில் சிறிது விளக்கெண்ணெய் கலந்து கணுக்கால், பாதத்தில் தடவுங்கள். சொரசொரப்பு, வெடிப்பு விருட்டென ஓடிவிடும்.

இந்த தைலத்தில் விளக்கெண்ணெய் சேர்க்காமல் நன்றாக ஆற வைத்து, எலுமிச்சைச் சாறை கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து விடுங்கள். இதை தினமும் காலை, இரவில் தடவி வர.. பாதம் பஞ்சு போல் மென்மையாக இருக்கும்.

அஜீரணத்துக்கு அருமருந்து!

மருத்துவ குணம் நிறைந்த, பூஜைக்கு ஏற்ற சம்பங்கி பூ வாசனையை அள்ளித்தரும்.

கரிபோளம்-9 கிராம், சம்பங்கி பூ தூள் - 35 கிராம் இரண்டையும் நல்லெண்ணெய் விட்டு காய்ச்சி இறக்கி, ஆற வைத்துக் கொள்ளவும். காதில் திருகு வலி, புண் ஏற்பட்டால், இந்த எண்ணெயை 2 சொட்டு காதில் விடலாம். புண் ஆறி, வலியும் எடுக்காது. .

4 சம்பங்கி பூவுடன், ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணெயை கலந்து அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை சூடு பறக்க நெற்றிப் பகுதியில் தடவினால்.. தாங்க முடியாத தலைவலியும் சட்டென குணமாகும்.

ஒரு டம்ளர் தண்ணீரில் 5 சம்பங்கிப் பூவைப் போட்டு காய்ச்சி.. பாதியாக குறுக்குங்கள். இந்த தண்ணீரை காலை, மாலை குடித்து வர... மலச்சிக்கல் மிரண்டு ஓடும். நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும். வெயிலால் வந்த ஜுரம் குணமாகும்.

சம்பங்கி பூவை சிறிது தண்ணீர் விட்டு அரையுங்கள். இந்த விழுதை கண்களை சுற்றி பூசி.. துணியால் கட்டி பத்து நிமிடத்துக்குப் பிறகு கழுவுங்கள். கண் நோய் சம்பந்தப்பட்ட வலி, எரிச்சல், நீர் வடிதல், வறட்சி... இவற்றையெல்லாம் போக்கி, குளிர்ச்சியைத் தந்து, கண்களை பளீரென பிரகாசிக்க வைக்கும்.

காய்ச்சிய பாலில் 2 பூவை போட்டு ஆற வையுங்கள். இதில் சர்க்கரை (அ) வெல்லம் சேர்த்து, ஒரு டம்ளர் வீதம் 48 நாட்கள் தொடர்ந்து குடித்து வர உடம்பில் தெம்பும் பலமும் பெருகும்.

No comments:

Post a Comment

Popular Posts